search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூஸ் ஜெ"

    டி.வி. சேனல் குறித்து விமர்சனம் செய்த நடிகர் விஷாலுக்கு அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ கடுமையான கண்டனம் தெரிவித்து உள்ளது. #NamadhuAmma #ADMK #Vishal
    சென்னை:

    தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் என 2 முக்கிய சங்கங்களிலும் தலைமை பொறுப்பில் இருப்பவர் நடிகர் விஷால்.

    சில ஆண்டுகளாகவே நடிகர் விஷால் அரசியலுக்கு வருவார் என்று செய்திகள் வெளியாகின. ரஜினியும் கமலும் கட்சி தொடங்குவதற்கு முன்பே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அரசியலுக்குள் நுழைந்தார்.

    ஆனால் கடைசி நேர குளறுபடிகளால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாதபடி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதற்கு அ.தி.மு.க.வினரே காரணம் என்று சொல்லப்பட்டதால் விஷாலுக்கும் அ.தி.மு.கவுக்குமான பனிப்போர் தொடங்கியது.

    இந்தநிலையில் அ.தி.மு.க.வுக்கு சொந்தமாக நியூஸ் ஜெ என்ற செய்தி சேனல் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. அப்போது டுவிட்டரில் விஷால் வெளியிட்ட ஒரு பதிவு, அ.தி.மு.க.வைச் சீண்டுவதுபோல அமைந்தது.

    அவர் வெளியிட்டு இருந்த பதிவில், “மற்றுமொரு செய்திச் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாதச்சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பைத் தொடங்க முடிகிறது? 2019-ம் ஆண்டுக்காகக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார். இது அ.தி.மு.க.வினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    விஷாலின் பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு விவாதத்தையும் உண்டாக்கியது. அவரது பதிவுக்கு கீழேயே பலர் கமெண்டுகளில் ‘அ.தி.மு.க.வை மட்டும் விஷால் சீண்டுவது ஏன்? மற்ற கட்சியினர் வைத்திருக்கும் சேனல்களுக்கும் கணக்கு கேட்பீர்களா?’ என்ற ரீதியில் கேள்விகள் கேட்க தொடங்கினார்.


    விஷால் தனது பதிவு பற்றி கூறும்போது ‘நான் இந்த அரசாங்கத்துக்கு வரி கட்டுபவன். எனக்கு கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறது. ஒரு சேனல் நடத்த ஆண்டுக்கு ரூ.30 கோடி வரை செலவாகும். அவர்களுக்கு எங்கிருந்து இந்த பணம் வருகிறது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    விஷால் கருத்துக்கு இன்று வெளியான அ.தி.மு.க நாளேடான நமது அம்மா கண்டனம் தெரிவித்து உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ‘நியூஸ் ஜெ’ தமிழ்ச் செய்தி தொலைக்காட்சிக்கு உலகெங்கும் இருந்து வாழ்த்துக்கள் குவிகிற வேளையில், ஒரு ‘வி‌ஷமப்பயல்’ மட்டும் வாழ்த்துக்கு பதிலாக வன்மத்தை கக்குகிறது. காசு ஏது என்று காழ்ப்புணர்ச்சி பேசுகிறது.

    இப்ப மட்டுமா?... வெகு நாளாகவே குறிப்பாக அம்மாவின் மறைவுக்குப் பிறகு துரோகியின் தூண்டுதலின் பேரில், கழகத்தை தொடர்ந்து பழிக்கிற துஷ்டனாகிவிட்ட “அந்த தோல்விப்பட நடிகர்” கணக்கு கேட்க வேண்டிய இடம், “63 லட்சம் ரூபாய் சொத்து கணக்கு காட்டிவிட்டு, தொலைக்காட்சி, பத்திரிகை நடத்துவதோடு, டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றியும், ஊரெங்கும் கூட்டம் நடத்துகிறேன் என்று மாதம் 10 கோடி ரூபாயை செலவு செய்யும் அந்த மாபியா தலைவனிடம் தானே...”

    அதைவிடுத்து, ஏறத்தாழ 2 கோடி தொண்டர்களை கொண்ட இமயப் பேரியக்கத்திடம்... ஆறாம் முறையாய் தமிழகத்தை ஆட்சி செய்யும் கழகத்திடம்... தொலைக்காட்சி தொடங்க பணம் ஏது என்று டுவிட்டரிலே, பதிவு போட்டு தனது நமைச்சலை வெளிப்படுத்துவது வெட்கக்கேடல்லவா?...

    சரி அதெல்லாம் போகட்டும்... நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 7 கோடி ரூபாயை காணோம்னு கோடம்பாக்கமே உன்னை கொலை வெறியில் தேடுகிறபோது, உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை...

    போ... போ... வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா வரச்சொல்லு....

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. #NamadhuAmma #ADMK #Vishal
    அதிமுகவினர் தொடங்கி இருக்கும் புதிய செய்தி சேனல் பற்றி நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். #Vishal
    ரஜினி, கமலுக்கு அடுத்து அந்த அரசியலில் நுழைய காத்திருப்பவர் நடிகர் விஷால். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கிய அவர் கடைசி நேரக் குளறுபடியால் போட்டியிடாமலேயே வெளியேறினார். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும் விஷாலுக்கும் மோதலும் ஏற்பட்டது.

    அதன் பின்னர் எந்தத் தேர்தலும் வரவில்லையென்றாலும் அ.தி.மு.க.வுக்கும் விஷாலுக்கும் இடையே பனிப்போர் இருந்து வருவதாகவே பலரும் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் ட்விட்டரில் நடிகர் விஷால் வெளியிட்டுள்ள ஒரு பதிவு, அ.தி.மு.க.வைச் சீண்டுவது போல அமைந்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    “மற்றுமொரு செய்திச்சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் மாதச் சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பைத் தொடங்க முடிகிறது? 2019ஆம் ஆண்டுக்காகக் காத்திருக்கிறேன்”.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


    முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்த அ.தி.மு.க. கட்சியின் அதிகாரபூர்வ டி.வி.யாக நியூஸ் ஜெ எனும் செய்திச் சேனல் தொடங்கப்பட்டிருக்கிறது. அதே நாளில்தான் நடிகர் விஷால் இப்படியாகக் கருத்து கூறியுள்ளார். எனவே, அ.தி.மு.க.வைத்தான் விஷால் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் என்று அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
    அ.தி.மு.க.வின் புதிய தொலைக்காட்சி சேனலான நியூஸ் ஜெயின் தொடக்க விழா நாளை மாலை நடைபெறுகிறது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒளிபரப்பை தொடங்கி வைக்கின்றனர். #NewsJ
    சென்னை:

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு முன்பு வரை அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக ஜெயா டி.வி.யும், அ.தி.மு.க. நாளேடாக நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையும் இருந்தது.

    இவை இரண்டும் சசிகலா குடும்பத்துக்கு சொந்தமானது என்பதால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொறுப்பேற்றதும் கட்சி நிகழ்ச்சிகள், அ.தி.மு.க. ஆட்சி தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு தனியாக பத்திரிகை, தொலைக்காட்சி தொடங்க வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நமது அம்மா பத்திரிகை தொடங்கப்பட்டது. அமைச்சர்கள் சிலரின் உறவினர்கள் இந்த பத்திரிகையை நிர்வகித்து வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக ‘நியூஸ் ஜெ’ தொடங்கப்படுகிறது. அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் சி.வி.ராதா கிருஷ்ணன் இதன் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

    ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சியின் லோகோ மற்றும் இணையதளம் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.


    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து இதை அறிமுகப்படுத்தினார்கள்.

    அப்போது விரைவில் ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நாளை மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் இதற்கான விழா நடைபெறுகிறது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒளிபரப்பை தொடங்கி வைக்கின்றனர். #ADMK #NewsJ #Edappadipalaniswami #OPanneerSelvam
    அ.தி.மு.க. டெலிவிஷனில் செய்தி சேனல், பொழுதுபோக்கு சேனல், இசை என 3 சேனல்கள் தொடங்கப்பட உள்ளது. விரைவில் இதற்கான சோதனை ஒளிபரப்பு தொடங்குகிறது. #NewsJ #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க.வுக்காக ஜெயா டி.வி.யை மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார். அதே போல் ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழும் தொடங்கப்பட்டது.

    டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின்பு ஜெயா டி.வி.யையும், நமது எம்.ஜி.ஆர். நாளிதழையும் தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் கைப்பற்றி விட்டனர்.

    இதனால் அ.தி.மு.க.வுக்காக “புரட்சித்தலைவி நமது அம்மா” என்ற பெயரில் புதிதாக நாளிதழ் தொடங்கப்பட்டது. அதில் அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ நிகழ்ச்சிகள் அறிக்கைகள் வெளியாகி வருகிறது.

    இதேபோல் அ.தி.மு.க.வுக்காக தனியாக டி.வி. சேனல்கள் தொடங்கவும் ஆலோசிக்கப்பட்டு வந்தது. அ.தி.மு.க. நிகழ்ச்சிகளுக்கு என்று தனியாக சேனல்கள் இல்லாததால் கட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப இயலாமல் போகிறது.

    இந்த குறையை போக்கவும், அரசின் சாதனைகளை ஒளிபரப்பவும், எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்கவும் தனியாக செய்தி சேனல் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    மூத்த அமைச்சர்கள் கூடி இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    அதன்படி செய்தி சேனல், பொழுதுபோக்கு சேனல், இசை என 3 சேனல்கள் தொடங்கப்பட உள்ளது. செய்தி சேனலுக்கு ‘நியூஸ் ஜெ’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.


    இதற்கான ‘லோகோ’வை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டனர்.

    மேலும் ‘நியூஸ் ஜெ’ டி.வி.யின் இணையதள முகப்பு, செல்போன் செயலி ஆகியவற்றையும் வெளியிட்டனர். தற்போது ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சி சோதனை ஒளிபரப்புக்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் சோதனை ஒளிபரப்பு தொடங்கும் என்றும் இன்னும் ஒரு மாதத்தில் தொடக்க விழா சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெற இருக்கிறது. #NewsJ #ADMK
    ×